காரைக்கால்,டிச.12: காரைக்கால் திருநள்ளாற்றில் சனிபகவான் தனி சன்னதி கொண்டுள்ள ஸ்ரீ தெர்பாராண்யேஸ்வரர் கோயிலில், சோமவாரத்தையொட்டி, ஒவ்வொரு திங்கள்கிழமையும் 108 சங்காபிஷேகம் நடைபெற்று வந்தது. சோமவாரம் நிறைவையொட்டி அருள்மிகு தியாகராஜருக்கு அபிஷேகம் செய்வதற்காக 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜையுடன், 1008 சங்களுக்கும் சிறப்பு பூஜையாக கும்ப பூஜையும், மகா பூர்ணாஹுதி தீபாராதனையும் நடைபெற்றது. பூஜையில், சதுர்வேத, ஆகம ஆசிர்வாதம், தேவாரம் பாடபட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர், சிவாச்சாரியார்கள் பிரதான சங்களை சுமந்து கோயிலின் உள் பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம் வலம் வந்து ஸ்ரீதெர்பாராண்யேஸ்வர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர். சிவப்பெருமானுக்கு 1008 சங்குகளில் அபிஷேகம் செய்வதை காண்பது பக்தர்களுக்கு சிறப்பை தரும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.